நடிகர், பாடகர் அரசியல்வாதி என பல முகங்களுக்கு சொந்தக்காரரும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மூத்த மகனுமான முக முத்து காலமானார்..இவரது இறப்பு செய்தி தமிழ் திரையுலகம் மட்டுமின்றி அரசியல் களத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...
கடந்த 1948-ம் ஆண்டு திருகுவளையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி - பத்மாவதி தம்பதிக்கு மகனாக பிறந்தார் மு.க.முத்து..தந்தை முத்துவேலரின் நினைவாக, தன் முதல் மகனுக்கு முத்து எனப் பெயர் சூட்டினார் கருணாநிதி..,இவர் பிறந்த இரண்டாவது ஆண்டில் முத்துவின் தாய் பத்மாவதி உயிரிழந்தார்..பின்னர் பாட்டியின் அரவணைப்பில் வாழந்து வந்தார்.
இளம் வயதிலேயே பல்வேறு தடைகளையும்,சோதனைகளையும் தாண்டி வளர்ந்து வந்த, மு.க முத்துவின் நடை, உடை , பாவனைகள் என அனைத்தும் எம்ஜி ஆரை போல இருந்ததால் எம்ஜி ஆருக்கு இணையாக களமிறக்க வேண்டும் என ஆசைப்பட்டார் கருணாநிதி.
அதன் பிறகு, 1970 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் மு.க முத்து..
‘பிள்ளையோ பிள்ளை என்ற திரைப்படத்தின் மூலம் தடம் பதித்த முக முத்து, சமையல்காரன்’, ‘அணையாவிளக்கு’, ‘இங்கேயும் மனிதர்கள்’ ‘பூக்காரி’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து தனி முத்திரை பதித்தார்.
அதே போல, தான் நடித்த படங்களில் சில பாடல்களையும் பாடிய முக முத்து திமுக கொள்கை விளக்க பாடல்களையும் பாடியுள்ளார்.
ஆரம்பத்தில், எம்.ஜி.ஆருக்கு போட்டியாக சினிமாவில் களமிறக்கப்பட்டவர் என்ற கருத்து நிலவி வந்த போது, மு.க.முத்து நடிப்பில் வெளியான ‘பிள்ளையோ பிள்ளை’ திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு வந்து கிளாப் அடித்து எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் என்பதை இங்கு நாம் பதிவு செய்தே ஆக வேண்டும்..
பின்னர் தனது தாய் மாமனின் மகள் சிவகாமசுந்தரி என்பவரை திருமணம் செய்து கொண்ட முக முத்துவுக்கு அறிவுநிதி என்ற மகன் உள்ளார்.
திருமணத்திற்கு பிறகு, மு.கமுத்துவின் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சில சோதனைகளின் காரணமாக 20 ஆண்டுகளாக அரசியல் சினிமாவை விட்டு விலகி இருந்தார்.
அதன் பிறகு கடந்த 2006-ஆம் ஆண்டு தேவா இசையில் ’மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் பாடல் ஒன்றை பாடி மீண்டும் திரையுலகை எட்டி பார்த்தார்..
இந்த நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மு.க.முத்து சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவரது உடல் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
மு.க.முத்துவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள் பொது மக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.