அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உலக வங்கியின் தலைமை அலுவலத்திற்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதியுதவி பெறுவதற்காக, உலக வங்கியின் செயல் இயக்குநர் அபர்ணாவிடம் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேச்சுவார்த்தை நடத்தினார். வாஷிங்டனில் உள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, தமிழக நிதித்துறை முதன்மைச் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் உலக வங்கியின் அதிகாரிகள் உடனிருந்தனர்.
அடுத்ததாக, பன்னாட்டு நிதியத்தின் அலுவலகத்துக்குச் சென்ற ஓ.பன்னீர்செல்வம், பன்னாட்டு நிதியத்தின் செயல் இயக்குநர் சுர்ஜித்பாலாவுடன், தமிழக பொது நிதிச் செலவினம் மற்றும் நிதித் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி ஆலோசனை நடத்தினார்.