தென்கிழக்கு வங்ககடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது தென்மேற்கு வங்ககடல் நோக்கி நகர்ந்துள்ளது. இத்தாழ்வுப்பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த தாழ்வுப்பகுதியாக மாறி இலங்கை மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்ககடல் பகுதிக்கு நகர்ந்து, பிறகு வடதமிழக கடற்கரை நோக்கி மிக மெதுவாக நகரத்துவங்கும்.
“இச்சலனமானது காற்றழுத்த தாழ்வு நிலையாக மாற வாய்ப்பு உள்ளது என்பதால் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது” என்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன். இது குறித்து அவர் தெரிவிப்பதன் முழு விவரத்தை இங்கே காணலாம்...
1. இச்சலனத்திற்கும் கடந்த சலனங்கள் போன்றே அரேபிய உயரழுத்தம், பசிபிக் உயரழுத்தம் மற்றும் மேற்கத்திய தாழ்வு நிலை என பல வானிலை காரணிகளை எதிர்க்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
2. சாதகமான கடல்வெப்பநிலையை கொடுத்து, கடல் சார்ந்த அலைவுகள் மற்றும் காற்று முறிவு காரணமாக மழைப்பொழிவை கொடுக்கூடிய சலனமாக இது அமையும்.
3. தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து தமிழக கடற்கரை நோக்கி நகரும் போதும் மிக மெதுவாக நகர்வதற்கும், தமிழக கடல்பகுதியில் ஒரே இடத்தில் மையம் கொள்வதற்கும் வாய்ப்புகள் தெரிகிறது.
4. டிசம்பர் 17 (நாளை) காலை முதல் டிசம்பர் 20 வரையிலான 4 நாட்கள் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து மழைப்பொழிவை கொடுக்கும். இந்த 5ம் சுற்று மழை டிசம்பர் 22 வரை நீடிக்க வாய்ப்பு உள்ளது.
5. குறிப்பாக வடகடலோர மாவட்டங்களில் டிசம்பர் 17,18, 19 தேதிகளில் பரவலாக மிககனமழைக்கு வாய்ப்பு தெரிகிறது. குறிப்பாக தமிழகத்தின் தலைநகர் சென்னையில் டிசம்பர் 17,18,19 தேதிகளில் கூடுதல் கவனமும், எச்சரிக்கையும் தேவை!
6. சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு விழுப்புரம் புதுச்சேரி கடலூரில் டிசம்பர் 17-19 தேதிகளில் பரவலாக கன முதல் மிக கனமழை வரை எதிர்ப்பார்க்கலாம். டிசம்பர் 17ம் தேதி இரவு முதல் டிசம்பர் 19ம் தேதி காலை வரையிலான 36 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் அதித கனமழை வாய்ப்பு உள்ளது.
7. சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் மண்ணின் ஈரப்பதம், நீர் நிலைகளின் நீர் இருப்பை கருத்தில் கொண்டு, சென்னை புறநகர் பகுதிகளின் தாழ்வான, நீர் நிலைகள் அருகே வசிக்கும் மக்கள் கூடுதல் கவனத்துடனும், எச்சரிக்கையாகவும் டிசம் 20ம் தேதி வரை இருக்க வேண்டியது அவசியம்.
8. அதேபோல ஃபெஞ்சல் புயல் பாதித்த புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலையில் சற்று கூடுதல் கவனம் தேவை.
9. டெல்டா மாவட்டங்களான நாகப்பட்டினம், மயிலாடுதுறை, காரைக்கால், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் டிசம்பர் 17, 18 ஆகிய தேதிகளில் பரவலாக மிதமானது முதல் சற்றே கனமழையும், ஒருசில இடங்களிக் கனமழையும் பதிவாகும்.
10. தென் மாவட்டங்கள் & உள் மாவட்டங்களில் டிசம்பர் 19ம் தேதி வரை பெரிதாக மழை பதிவாக வாய்ப்பு இல்லை என்றாலும், இச்சலனம் வலுவிழந்த பின்பு மேற்கு மாவட்டங்கள் மற்றும் தென்மாவாட்டங்கள் என் ஒட்டுமொத்த தமிழகக்திலும் இடி மழையை கொடுக்க வாய்ப்பு உள்ளது.