செய்தியாளர்: மணிகண்டபிரபு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேற்று சென்ற இசையமைப்பாளர் இளையராஜா கோயில் கருவறைக்குள் சென்றபோது அவர் தடுத்து வெளியேற்றப்பட்ட சம்பவம் இன்று சர்ச்சையானது.
இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்து சமய அறநிலையத்துறை மதுரை மண்டல இணை ஆணையர் விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அளித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலுக்கு 15.12.2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா சென்றுள்ளார். அப்போது கருவறைக்குள் செல்லாமல் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்ய வேண்டும் என அவரை அங்கிருந்தவர்கள் சிலர் கூறியுள்ளனர். இது இன்று காலை சர்ச்சையானது.
அந்த விளக்க கடிதத்தில், “விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருள்மிகு ஆண்டாள் திருக்கோயிலுக்கு, 15.12.2024 அன்று திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் சுவாமி தரிசனத்திற்கு வருகை புரிந்தனர். இத்திருக்கோயிலில் ஆண்டாள் ரெங்கமன்னார் கருடாழ்வார், மூலவர் கருவறையிலும், கருவறையினை அடுத்த அர்த்த மண்டத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார், கருடாழ்வார் உற்சவரும் எழுந்தருளியுள்ளனர். எனவே இத்திருக்கோயில் மரபு படியும். பழக்க வழக்கபடியும் அர்த்த மண்டபம் வரை திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர இதர நபர்கள் செல்வது வழக்கமில்லை என்றும் செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
15.12.2024 அன்று இசையமைப்பாளர் இளையராஜா அவர்கள் ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் உடன் வருகை புரிந்த போது, அவருடன் இணைந்து அர்த்த மண்டப வாசல் படி ஏறிய போது உடன் இருந்த ஜீயர் சுவாமிகள் மற்றும் திருக்கோயில் மணியம் அர்த்த மண்டபம் முன்பு இருந்து சாமி தரிசனம் செய்யலாம் என்று கூறியுள்ளனர்.
அப்போது இளையராஜாவும் அதனை ஒப்புக் கொண்டு அர்த்த மண்டபத்தின் முன்பு நின்றவாரே சுவாமி தரிசனம் செய்தார். ஸ்ரீ திரிதண்டி ஸ்ரீமன் நாராயண சின்ன ராமானுஜ ஜீயர் சுவாமிகள் மட்டும் அர்த்த மண்டபத்தின் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்தார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “கோயில் கருவறை முன் உள்ள அர்த்த மண்டபத்தில் நிரந்தரமாக உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு இருப்பதால் ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது. இந்த நிலையில் ஜீயருடன் வந்த இளையராஜா தகவல் அறியாமல் அர்த்த மண்டபத்திற்குள் இறங்கினார். இதனை தொடர்ந்தே மற்ற யாருக்கும் அனுமதி கிடையாது என உள்ளே இருந்த பட்டர்கள் ஜீயர்கள் தெரிவித்த உடன் அவர் வெளியே நின்று சாமி தரிசனம் செய்தார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.