புதுச்சேரியில் ஆளுநருக்கும், முதலமைச்சர் நாராயணசாமிக்கும் இடையிலான மோதல் நீடிக்கும் நிலையில், டெங்கு காய்ச்சல் விவகாரத்திலும் இருவருக்கும் இடையே மோதல் நிலவுகிறது.
புதுச்சேரியில் ஆட்சியாளர்களை பற்றி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தினம் பல்வேறு குற்றச்சாட்டுகளை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார். அம்மாநிலத்தில் கடந்த இருமாதங்களாக பல்வேறு மருத்துவமனைகளிலும் டெங்கு பாதிப்புக்கு நோயாளிகள் அனுமதிக்கப்படுவதும் சிகிச்சைப்பெற்று வெளியேறுவததுமாக இருக்கிறார்கள். இந்நிலையில், கடந்தவாரம் ஆளுநரின் தனிச்செயலாளரின் இரு மகன்களுக்கும் டெங்கு பாதித்த நிலையில், கிரண்பேடி நாராயணசாமி அரசை சாடிவருகிறார். புதுச்சேரியில் 700 சதவிகிதம் டெங்கு பாதிப்பு இருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்த முதல்வர் நாராயணசாமி, 700 சதவீத டெங்கு பாதிப்பு என்று கூறுவது ஏற்புடையதாக இல்லை என்றும் ஊடங்களில் தவறான பிரச்சாரம் செய்யவேண்டாம், டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளது என்றும் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகம் என்றும், தற்போது காய்ச்சலால் 138 பேர் தனி வார்டில் சிகிச்சை பெற்று வருவதாகவும், 33 பேர் டெங்கு அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருவதாகவும் புதுச்சேரி அரசு தலைமை மருத்துவ கண்காணிப்பாளர் மோகன்குமார் தெரிவிக்கிறார். இந்நிலையில் ஆளுநரும், முதலமைச்சரும் டெங்கு பிரச்னையை ஒழிப்பதில் தீவிரம் காட்ட வேண்டும் என்றும் இதை அரசியல் சர்ச்சை ஆக்கக்கூடாது என்றும் குரல்கள் எழுந்துள்ளன.