கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயகிருஷ்ணன்(58). இவர் கடந்த சில வருடங்களாக பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம், ராயல் கார்டன் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இவரது மகள் லாவண்யா(20), கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வானகரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில தினங்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த லாவண்யா, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு சரியாகாததால் பின்னர் அவர் பணிப் புரியும் வானகரத்திலுள்ள தனியார் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அப்போதுதான் அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் லாவண்யா நேற்று மாலை பரிதாபமாக இறந்து போனார். அவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெற்றது. மேலும் டெங்கு காய்ச்சலால் இவர் இறந்து போனதாக மருத்துவர்கள் இறப்பு சான்றிதழ் அளித்துள்ளனர்.
இது குறித்து பேசிய அவரது பெற்றோர், “காட்டுப்பாக்கம் பகுதியில் அதிக அளவில் மழை நீர் தேங்கி உள்ளதால் கொசுக்கள் அதிகளவில் உருவாகிறது. ஆகவே டெங்கு பாதிப்பு இந்தப் பகுதியில் அதிகமாக உள்ளது. அரசு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருக்கின்றனர். அடிக்கடி ஆய்வுக்கு வரும் அதிகாரிகள் உயர் அதிகாரிகளின் வற்புறுத்தலால் சில இடங்களில் மட்டும் நடவடிக்கை என்ற பெயரில் அபராதம் விதித்து விட்டு செல்கின்றனர். ஆனால் அதற்குப் பிறகு இந்தப் பகுதியில் ஆய்வுக்கு வருவது கிடையாது.
எனது மகளின் 10 வது பிறந்த நாளுக்காக இந்தப்பகுதி முழுவதும் பசுமை நிறைந்த இடமாக இருக்கவேண்டும் என்பதற்காகவும் சுற்றுச் சூழல் மாசு ஏற்படக்கூடாது என்பதற்காக எனது மகளின் பெயரில் இரும்பு தடுப்புகள் வைத்து இந்தப் பகுதி முழுவதும் மரக்கன்றுகள் நட்டோம். 10 ஆண்டுகளில் அந்த மரக்கன்றுகள் வளர்ந்து மரங்களாக மாறி, இந்தப் பகுதியே இயற்கையாக உள்ளது. எனது மகளின் பிறந்த நாளுக்கு நட்ட மரங்கள் வளர்ந்து பச்சை பசேலென நிற்கின்றன.
ஆனால் நான் வளர்த்த மகள் தற்போது எங்களிடம் இல்லை. இயற்கையை பாதுகாக்க மரக்கன்றுகளை எனது மகள் நட்டாள். ஆனால் ஒரு கொசு கடித்து டெங்கு காய்ச்சலால் எனது மகள் இறந்து இருப்பது எங்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இந்தப் பகுதியில் யாருக்கும் டெங்கு காய்ச்சல் வராத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்.