தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுத்துள்ளது. வழக்கின் விவரங்கள் குறித்து புகார்தாரர், மனுதாரர் இரு தரப்பிலும் கூடுதல் விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தலைவர் திருமாறன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், 'தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக பாலகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மதுரை எஸ்எஸ்.காலனி போலீசார் வழக்குப்பதிவு செய்து என்னை கைது செய்தனர்.
இந்த வழக்கு உள்நோக்கத்தோடு என்மீது கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி இளங்கோவன் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு தரப்பில்,' தமிழகத்தின் நிதி அமைச்சரை பற்றி அவதூறாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஆகையால் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்ற உத்தரவின் படி வழக்கு பதியபட்டுள்ளது. மேலும் வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டி தேவை இல்லை' என வாதிடப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி வழக்கை ரத்து செய்ய மறுத்து, வழக்கின் புகார்தாரர் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பில் வழக்கின் கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கினை இறுதி விசாரணைக்காக ஜூலை 19ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.