தமிழ்நாடு

தண்ணீர் தேடி வந்த மான், நாய் கடித்து பரிதாப பலி

webteam

வேதாரண்யம் காட்டிலிருந்து தண்ணீர் குடிக்க கிராமத்திற்குள் வந்த புள்ளி மான் ஒன்று நாய் கடித்ததில் உயிரிழந்தது.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை வனவிலங்குகள் சரணாலயத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புள்ளிமான்கள் மற்றும் வெளிமான்கள் உள்ளன. இவை சரணாலயத்தை விட்டு வெளியேறி, அருகில் உள்ள கிராமத்திற்குள் தண்ணீர் தேடி வந்து விடுகின்றன. அப்படி வரும் மான்களை நாய்கள் துரத்தி காயப்படுத்துவது அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கோடியக்கரை சரணாலயத்திலிருந்து 4 வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று நாகக்குடையான் கிராமத்திற்கு தண்ணீர் தேடி வந்தது. அதனை நாய் ஒன்று துரத்தி கடித்தது. இதில் பலத்த காயமடைந்த மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இது குறித்து தகவலறிந்த கோடியக்கரை வனத்துறையினர், இறந்த மானை உடற்கூராய்விற்காக கத்திரிப்புலம் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் மான் இறந்தது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.