திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பெற்றோர் வாங்கிய கடன் திருப்பி தர இயலாத காரணத்தினால் 3 பெண் பிள்ளைகளை வீட்டில் வைத்து கடன்தாரர் பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி டவுன் பெரியார் நகரை சேர்ந்த கூலி தொழிலாளி ரகு - அஞ்சுகம் என்ற தம்பதியினருக்கு ரித்விகா (17), சத்விகா (17) மற்றும் ரிஷ்கா (15) ஆகிய 3 பெண் பிள்ளைகளுடன் உள்ளனர். ரகுவின் மனைவி அஞ்சுகம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வருகிறார். மேலும் கூலித் தொழிலாளியான ரகு கொரோனா காலத்தில் வேலைக்கு செல்லமுடியாததால் உறவினரான பாரதியார் தெருவை சேர்ந்த கேஷ்டிராஜா என்பவரிடம் 18 மாதம் முன்பு 2 லட்சத்து 50 ஆயிரம் வட்டிக்கு கடனாக பெற்றிருக்கிறார். ஆனால் ரகுவிற்கு வேலை சரியாக இல்லாத காரணத்தினால் வட்டி கட்டவில்லை. இதனால் கடன் கொடுத்த கேஷ்டிராஜா கடனை திருப்பித் தருமாறு கேட்டு தொந்தரவு செய்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலையில் ரகுவும், மனைவி அஞ்சுகமும் பணிக்கு சென்றுள்ளனர். அப்போது வீட்டிற்கு வந்த கேஷ்டிராஜா பணம் தரவில்லை என்பதால் வீட்டில் இருந்த ரகுவின் 3 பெண் பிள்ளைகள் மற்றும் உறவினரின் பெண் பிள்ளையான யோகேஷ்வரி ஆகிய 4 பெண் பிள்ளைகளை வீட்டில் உள்ளேயே வைத்து வீட்டின் கேட்டை பூட்டி விட்டுச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து ரகு மற்றும் அஞ்சுகத்திற்கு பிள்ளைகள் செல்போன் மூலம் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.
இதனால் வீட்டிற்கு உடனடியாக வந்த அஞ்சுகம் ஆரணி நகர காவல்நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆரணி நகர போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது ரகு பெற்ற கடனைத் திருப்பி செலுத்த இயலாத காரணத்தினால் கடன் கொடுத்த உறவினர் வீட்டை பூட்டியது விசாரணையில் தெரியவந்தது. இது சம்மந்தமாக வீட்டை பூட்டிய கேஷ்டிராஜா என்பவரை ஆரணி நகர காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.