தமிழ்நாடு

கடன் தொல்லை: கடிதம் எழுதி வைத்துவிட்டு நகை பட்டறை உரிமையாளர் குடும்பத்தோடு தற்கொலை

kaleelrahman

உசிலம்பட்டியில் கடன் பிரச்னையால் நகை பட்டறை உரிமையாளர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட ஆர்.கே.கருப்பத்தேவர் தெருவைச் சேர்ந்தவர் சரவணன், இவர், உசிலம்பட்டி நகைக்கடை பஜாரில் நகை பட்டறை வைத்து நகைத் தொழில் செய்து வந்தார். இந்நிலையில், இவருக்கு கடன் பிரச்னை இருந்து வந்ததாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த சரவணன் இன்று காலை வழக்கம் போல எழுந்து வீட்டை திறந்து கோலமிட்டு சற்று நேரத்தில் மீண்டும் வீட்டை பூட்டிக் கொண்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வீடு அதிக நேரமாக பூட்டியே கிடந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த சரவணன், அவரது மனைவி விஜி என்ற ஸ்ரீநிதி, மகள்கள் மகாலட்சுமி, அபிராமி மற்றும் மகன் அமுதன் என ஐந்து பேரும் இறந்த நிலையில் கிடந்ததைக் கண்ட உறவினர்கள் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தியதில் அனைவரும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து உடல்களை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

===

மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)