நேபாளம்-திபெத் எல்லையிலுள்ள இமயமலையில் பனிப்பாறை உடைப்பு காரணமாக போதே கோஷி ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் 9 மீட்டர் உயரம் வரை நீர்மட்டம் உயர்ந்து, நீர்மின் திட்டங்கள், வீடுகள், சுற்றுலா பயணிகள் அனைத்தையும் சுனாமி வேகத்தில் சிதறடித்தது. பலி எண்ணிக்கை 579 ஆக உயர்ந்த நிலையில், தமிழகம்-புதுச்சேரியை சேர்ந்த 106 பேரில் 21 பேர் மட்டுமே மீட்கப்பட்டு, 83 பேரின் நிலை இன்னும் மர்மமாக உள்ளது.
நேபாளத்தில் கடந்த 26ஆம் தேதி பனிப்பாறை உடைப்பு காரணமாக ஏற்பட்ட பேரழிவு உலகையே உலுக்கியுள்ளது. நேபாள் - திபெத் எல்லையில் அமைந்துள்ள இமயமலை பகுதியில் இருந்த பனிப்பாறை தீடிரென உடைந்து அதில் இருந்த ஏராளமான நீர் ’போதே கோஷி (Bhote Koshi)’ ஆற்றில் பாய்ந்து வந்ததால் நேபாளத்தில் பெரும் அழிவு ஏற்பட்டுள்ளது.
சில வினாடிகளில் 9 மீட்டர் வரை ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, சுனாமி வேகத்தில் வந்த வெள்ளத்தால் நீர்மின் கட்டமைப்புகள், வீடுகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் ஆகியோர் அடித்து செல்லப்பட்டனர். இந்த பேரழிவில் இதுவரை 500க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள நிலையில், காணாமல் போன ஆயிரக்கணக்கானோரை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் நேபாள வெள்ளத்தில் 104 தமிழர்கள் சிக்கிய நிலையில், அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருவதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது. தமிழர்களை உடனடியாக மீட்கவேண்டுமென நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
நேபாள வெள்ளத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 106 பேர் சிக்கிக்கொண்டதாக சொல்லப்படுகிறது. அதில் தற்போது 21 பேர் மீட்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 83 தமிழர்களின் நிலை என்ன என்பதே தெரியாமல் இருந்துவருகிறது.
நேபாள வெள்ளத்தில் சிக்கிய தமிழர்கள் 21 பேர் டெல்லி வழியாக தமிழகம் வந்தடைந்தனர். டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்த அவர்களை அமைச்சர்கள் ஆனந்த், சரத் மற்றும் உறவினர்கள் நேரில் வரவேற்றனர். தங்களை பாதுகாப்பாக தமிழகம் கொண்டு வந்து சேர்த்ததாக கூறி, மத்திய, மாநில அரசுகள் மற்றும் நேபாள ராணுவத்துக்கும் அவர்கள் நன்றி தெரிவித்தனர். மேலும் காணாமல் போனவர்களை தேடும் பணியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும் எனவும் சென்னை திரும்பியவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தமிழர்கள் மீட்கப்படுவது குறித்து டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ்நாட்டிலிருந்து சென்றவர்களில் சுமார் 140 பேர் பாதுகாப்பாக உள்ளதாகவும், சுமார் 90 பேர் தொடர்புகொள்ள முடியாத நிலையில் உள்ளதாகவும் கூறினார். மேலும் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 400 பேர் நேபாளம் சென்றிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். மீதமிருக்கும் தமிழர்களின் நிலை என்ன, அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு தாயகம் திரும்புவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.