தமிழ்நாடு

சென்னை: கொரோனாவால் தாய்,மகன் உயிரிழப்பு; இறுதிச் சடங்கு செய்ய முன்வராத உறவினர்கள்

Veeramani

சென்னை அருகே கொரோனா பாதிப்பால் மகனும் தாயும் அடுத்தடுத்த நாள்களில் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. அவர்களது உடல்களை உறவினர் யாரும் அடக்கம் செய்ய முன்வராததால் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலரும், ஊராட்சித் தலைவரும் நல்லடக்கம் செய்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூவிருந்தவல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தில் தாயுடன் வசித்து வந்த இளைஞருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அவரது தாய்க்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பரிசோதனை செய்த மறுநாளே அந்த இளைஞரின் தாய் வீட்டில் இறந்து கிடந்தார். இவர்கள் இருவரின் இறுதிச்சடங்குகளை செய்ய உறவினர்கள் யாரும் முன்வரவில்லை.

இதனால் பூவிருந்தவல்லி ஒன்றிய கவுன்சிலர் கவுதமன், ஊராட்சி மன்றத் தலைவர் சீலா சரவணன் ஆகியோர் வீட்டில், தாய் - மகன் இருவரின் உடல்களையும் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, ஊராட்சி மன்றம் சார்பில் இறுதிமரியாதை செய்து நல்லடக்கம் செய்தனர்.