கொலை செய்யப்பட்ட பரமேஸ்வரி - கைது செய்யப்பட்ட சிவரஞ்சனி
கொலை செய்யப்பட்ட பரமேஸ்வரி - கைது செய்யப்பட்ட சிவரஞ்சனி  புதிய தலைமுறை
தமிழ்நாடு

மதுரை : சொத்துக்கு ஆசைப்பட்டு தாயைக் கொலை செய்த மகள்; கணவருடன் சேர்ந்து நாடகமாடியது அம்பலம்!

webteam

செய்தியாளர் - பிரேம்குமார் 

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள தேங்கல்பட்டியைச் சேர்ந்தவர் பரமேஸ்வரி. இவரது கணவர் செல்வம். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர் அரசு போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் போது உயிரிழந்துள்ளார். இதையடுத்து அந்த வேலை பரமேஸ்வரிக்கு கிடைத்துள்ளது. அப்போதிருந்து பழங்காநத்தம் அரசு போக்குவரத்து பணிமனையில் சமையலராக பணியாற்றி வந்தார் பரமேஸ்வரி.

சில ஆண்டுகள் கழித்து அதே பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்த சிவன்காளை என்பவருடன் திருமணம் செய்யாமல் பரமேஸ்வரி வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பரமேஸ்வரி தன் மகள் சிவரஞ்சனியை சமீபத்தில் திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

உயிரிழந்த பரமேஸ்வரி

தொடர்ந்து பரமேஸ்வரி தனக்கு சொந்தமான வீடு மற்றும் சொத்துக்களை சிவன்காளையின் மகனுக்கு எழுதிக் கொடுக்க முயன்றதாக தெரிகிறது. இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட சிவரஞ்சனி, தனக்குச் சொந்தமாக வேண்டிய சொத்துக்களை யாருக்கும் கொடுக்கக் கூடாது என அடிக்கடி தாய் பரமேஸ்வரியுடன் தகராறில் ஈடுபட்டு வந்தாக கூறப்படுகிறது.

கடந்த 10ஆம் தேதி தேங்கல்பட்டியில் பரமேஸ்வரி புதிதாகக் கட்டப்பட்டு வரும் வீட்டைத் தனது பெயரில் எழுதி வைக்கச் சொல்லி வீட்டிற்கு வந்து சிவரஞ்சனி பிரச்னை செய்துள்ளார். அப்போது பரமேஸ்வரி "வீட்டை எழுதித் தர முடியாது" எனத் தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிவரஞ்சனி அவருடைய கணவர் ஜெயப்பிரகாஷ் மற்றும் அவரது கூட்டாளிகளான, புதுக்கோட்டையைச் சேர்ந்த மதுசூதனன், மதனகோபால், அழகுபாண்டி உள்ளிட்டோர், பரமேஸ்வரி வீட்டிற்குச் சென்று அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.

இதில் மயங்கி விழுந்த பரமேஸ்வரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த விட்டு, தனது தாய் திடீரென மயங்கி கீழே விழுந்துவிட்டதாக நாடகமாடி மருத்துவர்களை சிவரஞ்சனி நம்ப வைத்துள்ளார். பின்னர் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

சிவரஞ்சனி கணவர்

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் பரமேஸ்வரியின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர்.

கைது செய்யப்பட்ட நபர்கள்

அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் யார் யார் பரமேஸ்வரியின் வீட்டிற்கு வந்து சென்றுள்ளனர் என போலீசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது சிவரஞ்சனி, அவரது கணவர் மற்றும் கூட்டாளிகள் வந்து சென்றதைக் கண்டுபிடித்தனர். பின்னர் 5 பேரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், பரமேஸ்வரியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர்

இதனையடுத்து சிரவரஞ்சனி, அவருடைய கணவர் உள்ளிட்ட 5 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்துக்கு ஆசைப்பட்டு கணவருடன் சேர்ந்து பெற்ற தாயை, மகளே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.