மதுரையில் கஞ்சா விற்க சொல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல் துறையினர் துன்புறுத்துவதாக தாயும், மகளும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் பெரியபட்டி காஞ்சரம் பேட்டையை சேர்ந்தவர் மீனாட்சி. இவருடைய மகள் பஞ்சு. சில ஆண்டுகளுக்கு முன்பு வயிற்றுப் பிழைப்புக்காக தாயும், மகளும் அப்பகுதியில் கஞ்சா வாங்கி விற்று வந்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சுவின் கணவர் இறந்த காரணத்தினாலும், தனது தாய் மீனாட்சியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தினாலும், திருந்தி வாழ வேண்டும் என நினைத்து கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பிலிருந்து கஞ்சா வாங்கி விற்பதை நிறுத்திவிட்டு, புதிதாக இட்லி கடை ஒன்றை தொடங்கி அதன் மூலம் வருவாய் ஈட்டியுள்ளார் பஞ்சு.
இந்நிலையில், தங்களை மீண்டும் கஞ்சா விற்கச் சொல்லி காவல்துறையினர் வற்புறுத்துவதாக தாய் மீனாட்சியும், மகள் பஞ்சுவும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்துள்ளனர். தங்கள் நிலை குறித்து அவர்கள், “போதைப் பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் தன்னையும், தனது தாயையும் மீண்டும் கஞ்சா விற்க சொல்லி வற்புறுத்துகின்றனர். அப்படி இல்லையென்றால் பொய் வழக்குப் போட்டு விடுவோம் என்று மிரட்டினர். பொய் வழக்கு போடாமல் இருக்க தன்னிடம் இருந்த பால் மாட்டினை விற்று ரூ.20,000 கொடுத்த பின்பே தன்னை விடுவித்தனர்.
பணம் கொடுத்த பின்பும் நேற்று அதிகாலை 4 மணியளவில் ஊமச்சிகுளம் காவல்நிலையத்திலிருந்து காவலர்கள் தேடி வந்தனர். நான் கஞ்சா விற்பனை செய்வதை மறந்து புதிய வாழ்க்கையை வாழ விரும்புகிற நிலையில், என்னை துன்புறுத்தி மீண்டும் கஞ்சா விற்க சொல்லி வற்புறுத்துகின்றனர். அத்துடன், தவறான பாதைக்கு வழிவகுக்கும் வகையில் காவல்துறையில் துன்புறுத்துவதால் தானும் தனது தாயாரும் தற்கொலை செய்வதை தவிர வேறு வழியின்றி உள்ளோம்” என்று கண்ணீர் மல்க கூறினர்.