தமிழ்நாடு

பெரம்பலூர்: தொடரும் கனமழை - பிரதான சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் மின் ஒயர்கள்!

பெரம்பலூர்: தொடரும் கனமழை - பிரதான சாலையில் ஆபத்தை ஏற்படுத்தும் மின் ஒயர்கள்!

webteam

பெரம்பலூரின் பிரதான பகுதி நடைபாதையில் மின்வயர் சேதமடைந்து ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருக்குமாறும், மின்கம்பங்களை தொடவேண்டாம், மின்வயர்கள் அறுந்துகிடந்தால் கவனமாக இருக்க வேண்டும் என்பன போன்ற எச்சரிக்கையும் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பெரம்பலூர் நகரின் பிரதான பகுதியான காமராஜர் வளைவு அருகே மின் கம்பங்களுக்கு செல்லும் வயர் தேய்ந்துபோய் சேதமடைந்து இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

சாலையை கடப்பதற்கு சென்டர் மீடியனில் ஏற்படுத்தப்பட்டிருந்த பாதையில் இருந்த மின்வயர் ஆபத்தை விளைவிக்க கூடிய வகையில் உள்ளது. தினமும் ஏராளமானோர் கடந்து செல்லும் இந்த பாதையில் மின்வயர் சேதமடைந்து இருப்பதை உடனடியாக சீர் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே போல் சென்டர் மீடியனில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் முறையான பராமரிப்பின்றி இருப்பதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். எனவே பெரம்பலூர் மின்சாரவாரியம் காமராஜர் வளைவு பகுதியில் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மின்வயர்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.