தமிழ்நாடு

கொரோனா 3-ம் அலையில் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு ஆபத்து: மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை

Veeramani

தமிழ்நாட்டில் கொரோனா 3-ஆவது அலையின்போது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதிக பாதிப்பிற்கு ஆளாக வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ள நிலையில் அரசும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தொடங்கி உள்ளது.

கொரோனா 2-வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அடுத்து ஒரு எச்சரிக்கை ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது. அதுதான் 3-வது அலை. கொரோனாவின் 3-ஆவது அலையை எதிர்கொள்ள குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவ கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருக்கிறது. குழந்தைகள் நல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஐசியு படுக்கை வசதிகள் ஏற்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவர்கள், செவிலியர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட வேண்டும், 4-ல் ஒரு பகுதி செவிலியர்களை அவசர கால பணிக்காக இப்போதே தயார்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பொது மருத்துவம், மயக்கவியல் துறை மருத்துவர்களும் கொரோனாவின் 3ஆவது அலையை எதிர்கொள்ள எந்தநேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா 3வது அலையின்போது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரித்துள்ளதால் மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு முன்கூட்டியே தெரிவித்திருக்கிறது. கொரோனா தடுப்பு விதிகளை தொடர்ந்து கடைபிடிப்பது, தடுப்பூசி செலுத்திக் கொள்வது ஆகியவையே 3வது அலையின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்