தமிழ்நாடு

’காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுக்கிறார்’.. பட்டியலின நிறைமாத கர்ப்பிணி பெண் தர்ணா!

webteam

கும்பகோணம் அருகே காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு தன்னை திருமணம் செய்ய மறுப்பதாக பட்டியலின நிறைமாத கர்ப்பிணி பெண், காவல்நிலையம் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளார்.

கும்பகோணம் அருகே சன்னாபுரம் பணிக்காரத் தெருவைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த தமிழ்செல்வத்தின் மகள் அபிராமி (21). இவரும், தேப்பெருமாநல்லூர் வடக்கு தெருவைச் சேர்ந்த மாற்று சமூகத்தை சேர்ந்த மணி என்பவரின் மகன் பாரதி (18). இவர்கள் இருவரும் சன்னாபுரத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் பணியாற்றும் போது காதல் வயப்பட்டு, பின்னர் இருவரும் இரு வீட்டாருக்கும் தெரியாமல், திருப்பூரில் வேலைக்குச் சென்று அங்கு கணவன் மனைவியாக குடும்பம் நடத்தியதாக தெரிகிறது. இதில், தற்போது அபிராமி (21) 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து அபிராமியின் பெற்றோர், பாரதி குடும்பத்தாரிடம் அபிராமியை திருமணம் செய்துகொள்ள கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டதாக தெரிகிறது.

இதனையடுத்து அபிராமி குடும்பத்தினர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கும்பகோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாரதியுடன் திருமணம் செய்து வைக்கக்கோரி புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து இருதரப்பினரிடமும் காவல்துறையினர் பேசிவந்த நிலையில், அனைத்து மகளிர் காவல் துறையினர் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறி, அபிராமி மற்றும் அவரது பெற்றோர் தரப்பினர் இன்று மகளிர் காவல் நிலையம் முன்பு பிளக்ஸ் பேனருடன், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. தகவறிந்த காவல்துறை துணை கண்காணிப்பாளர் அசோகன், மகளிர் காவல் ஆய்வாளர் நாகலட்சுமி தலைமையிலான காவல்துறையினர் அவர்களிடம் விரைந்து நடவடிக்கை எடுப்பது குறித்து பேசிய பின்னர் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.