தொழில் நஷ்டம் அடைந்ததன் காரணமாக குடும்பத்துடன் தற்கொலைக்கு முயன்றதில் தந்தை, மகன் உயிரிழந்தனர்.
விருதுநகர், ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் இன்ப மூர்த்தி (65). இவர் பெரியவள்ளி குளம் பகுதியில் மல்லி மில் நடத்தி வந்தார். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் சுமார் 40 லட்சம் வரை இன்ப மூர்த்தி கடனில் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனால் இவர் சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலையில் தனது மில்லில் இன்ப மூர்த்தி, அவரது மனைவி திலகவதி மற்றும் மகன் கண்ணன்(40)
ஆகியோர் குடும்பத்துடன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர். இதில் இன்பமூர்த்தி மற்றும் மகன் கண்ணன் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரழந்தனர். திலகவதி மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிக் கொண்டிருந்தார்.
இதையடுத்து இன்று காலையில் பணியாளர் வந்து கதவைத் திறந்தபோது உள்ளே இன்ப மூர்த்தி மற்றும் அவரது மகன் கண்ணன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து விரைந்து வந்த போலீசார் உயிருக்கு போராடிய திலகவதியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்ப மூர்த்தி தனது தற்கொலைக்கு காரணம் வியாபாரத்தில் நஷ்டம் அடைந்தது தான் என கடிதம் எழுதி வைத்துள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றிய சூலக்கரை போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)