தமிழ்நாடு

கரையை கடக்கத் தொடங்கிய மாண்டஸ் புயல்: சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிப்பு

webteam

மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு உருவான இந்த புயல் இன்று (டிச.9) நள்ளிரவு 11.30 மணிக்கு மகாபலிபுரம் அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது. இந்த நிலையில், புயல் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. இதையடுத்து பேரிடர் மீட்பு கட்டுப்பாட்டு அறையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே இ.சி.ஆர்-ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சென்னையில் பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மின்சார வாரியம் தரப்பில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், “புயல் காற்று அதிகம் வீசும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் துண்டிக்கப்படும். இவ்வாறு துண்டிக்கப்பட்ட மின்சாரம் 2 மணி நேரத்தில் மீண்டும் கிடைத்துவிடும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் புயல் காரணமாக நாளைய தினம் மின்சார ரயில்கள் வழக்கம்போல் இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மாண்டஸ் புயலின் வெளிப்புற பகுதி கரையைக் கடக்கத் தொடங்கியுள்ளது. 14 கி.மீ வேகத்தில் புயல் கரையை கடந்து வருவதால், மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசி வருகிறது.

<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/dCK02ZQJ1Wo" title="#breaking: கரையை கடக்கத் தொடங்கியது மாண்டஸ்" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>