தமிழ்நாடு

'வங்கக்கடலில் புயல் உருவாகிறது' - வானிலை மையம்

'வங்கக்கடலில் புயல் உருவாகிறது' - வானிலை மையம்

webteam

வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் 24 மணிநேரத்திற்குள் புயலாக மாற வாய்ப்புள்ளதாகச் சென்னை
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கஜா புயலுக்குப் பின் தமிழகத்தில் அவ்வப்போது மழை பெய்து வந்தது. வட மாவட்டங்களை பொறுத்தவரை வறண்ட
வானிலையே காணப்பட்டது. இந்நிலையில் தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.
இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்‌பெற்றுள்ளது. 

இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் சென்னைக்கு தென்கிழக்கே 930 கிலோ மீட்டர் தொலைவிலும், ஆந்திர மாநிலம்
மசூலிப்பட்டினத்திற்கு தென்கிழக்கே ஆயிரத்து 90 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது 24 மணி
நேரத்திற்குள் புயலாக மாறி வரும் டிசம்பர் 17ஆம் தேதி ஓங்கோலுக்கும், காக்கிநாடாவுக்கும் இடையே கரையைக் கடக்கக்
கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதன் காரண‌மாக நாளை முதல் 2 நாட்களுக்கு வட தமிழகத்தில் ஒருசில இடங்களில் மழையும் ஓரிரு இடங்களில்
கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் 15,16ஆம் தேதிகளில் வங்கக் கடல்
பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.