அதிமுகவில், தொடர் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இருதரப்பும் சமாதானமாகி ஒன்றிணைந்துள்ளன. இதையடுத்து, அவர்கள் சபாநாயகரிடம் சென்று மனு அளித்தனர். அதேநேரத்தில், சி.வி.சண்முகம் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவில்லை. அவரது திட்டம் என்ன என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. அதேசமயம், இத்தேர்தலில் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியடைந்தது. தோல்வி காரணமாக அக்கட்சியில் உட்கட்சிப் பூசல் நிலவியது. இதனால் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என ஒரு குழுவாகவும், எடப்பாடி பழனிசாமி ஒரு குழுவாகவும் இயங்கியது. இதற்கிடையே எஸ்.பி.வேலுமணி தரப்பைச் சேர்ந்த அதிமுக எம்.எல்.ஏக்களான மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா மற்றும் அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவி விலகல் கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துவிட்டு, தவெகவில் போய் இணைந்தனர். அதேநேரத்தில், எஸ்.பி.வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் சிலர், மீண்டும் பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர்.
இதற்கிடையே, அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமியுடன், எஸ்.பி.வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்கள் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து இருதரப்பும் இணைந்ததாக அதிமுக ஐடி விங்க் தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது.
தொடர்ந்து, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இடையேயான சமரச முயற்சி கைகூடியுள்ள நிலையில் இருதரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவலகத்தில் ஒன்றாக கடிதம் அளித்தனர். எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராகவும், அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கவும் கோரி இருதரப்பும் சபாநாயகரிடம் மனு அளித்துள்ளனர்.
தவிர, அதிமுகவின் சட்டமன்ற குழுத் தலைவராக எஸ்பி வேலுமணிகையும் கொறடாவாக விஜயபாஸ்கரையும் நியமிக்க வேண்டும் என கூறி சபாநாயகர் இடம் வழங்கப்பட்ட கடிதத்தை அவர்கள் திரும்பப் பெற்றனர். எனினும், இந்த நிகழ்வுகளில் சி.வி.சண்முகம் இடம்பெறவில்லை. இபிஎஸ்ஸை நேரில் சந்திக்கவும், வருத்தம் தெரிவிக்கவும் அவர் மறுத்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அவர் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியிலிருந்தும் விலக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.