தமிழ்நாட்டில் கடந்த சில வருடங்களாகக் காவல் மரணங்களும், கைதிகள் மீதான சித்திரவதைகளும் தொடர்ந்து அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்திய மாநிலங்களிலேயே காவல் மரணங்கள் நிகழ்வதில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் எச்சரிக்கின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் சுமார் 39 காவல் மரணங்கள் பதிவாகியுள்ளன. இதில் கடந்த ஓராண்டில் 13 மரணங்களும், சென்ற இரண்டு மாதங்களில் மட்டும் 4 மரணங்களும் நடந்துள்ளதாகப் புகார்கள் எழுந்துள்ளன. சமூக நீதி பேசும் மாநிலத்தில் இத்தகைய மனிதநேயமற்ற அத்துமீறல்கள் தொடர்வது சட்டம்-ஒழுங்கு மீதான நம்பிக்கையைக் குலைப்பதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, 'லோக்நீதி - சிஎஸ்டிஎஸ்' (Lokniti-CSDS) அமைப்பின் ஆய்வறிக்கை ஒன்று, தமிழகக் காவல் துறையினரில் 91 சதவீதம் பேர் குற்றப் புலனாய்வின்போது 'சித்திரவதை தேவை' என்ற ஆபத்தான மனநிலையைக் கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. காவல்துறையின் இந்த வரம்பு மீறிய அத்துமீறல்களுக்கும், சிறைக் கொடுமைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கக் காவல் துறையின் ஒட்டுமொத்த மனநிலையை மாற்ற வேண்டியது அவசியம் என மனித உரிமைப் போராளிகள வலியுறுத்துகின்றனர்.