தமிழ்நாடு

‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு 1264 கோடி ஒதுக்கீடு’ - ஆர்டிஐ தகவல்

Rasus

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க ரூ.1264 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தரப்பில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் என்று கடந்த 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய குழு ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான நிலவரம் எந்த நிலையில் இருக்கிறது என மத்திய அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் டாக்டர் லக்ஷ்மணன் என்பவர் கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத் துறை இணைச் அமைச்சர் அஸ்வினி குமார் சவுபே பதில் அளித்துள்ளார். அதில் மதுரை மாவட்டத்தில் உள்ள தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்காக தற்போது நில ஆய்வை, மண்ணின் உறுதித் தன்மை குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செப்டம்பர் 2022-ஆம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டி முடிக்கப்பட வேண்டும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன் இந்த மருத்துவமனை திட்டத்திற்காக 1264 கோடி நிதி ஒதுக்க ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.