தமிழ்நாடு

45 நாட்களுக்குப் பிறகு வந்த அரசு பேருந்து: சிறப்பு பூஜையுடன் வரவேற்ற மலை கிராம மக்கள்

kaleelrahman

வாணியம்பாடி அருகே ஊரடங்கு தளர்வை தொடர்ந்து 45 நாட்களுக்குப் பிறகு வந்த அரசு பேருந்தை மலை கிராமம் மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து வரவேற்றனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் 45 நாட்களாக பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தளர்வுகள் உடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் 50 சதவீத பயணிகளுடன் அரசு பேருந்துகளை இயக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து இன்று வாணியம்பாடியில் இருந்து ஆலங்காயம் வழியாக மலை ரெட்டியூர் செல்லக்கூடிய அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு மலை ரெட்டியூர் மலை கிராமத்திற்குச் சென்றது. அப்போது அங்கிருந்த கிராம மக்கள் சிறப்பு பூஜைகள் செய்து தேங்காய்கள் உடைத்து அரசு பேருந்தை வரவேற்றனர். 45 நாட்களுக்குப் பிறகு அரசு பேருந்து கிராமத்துக்குள் வந்ததால் மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.