Accident
Accident pt desk
தமிழ்நாடு

கடலூர்: லாரி - வேன் நேருக்கு நேர் மோதி விபத்து; விசிக மாநாடுக்கு சென்று திரும்பிய 3 பேர் உயிரிழப்பு

webteam

செய்தியாளர் - கே.ஆர்.ராஜா

திருச்சியில் நேற்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு தொண்டர்கள் வந்த வேன் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நாரையூர் கிராமம் அருகே சேலம் - விருத்தாசலம் சாலையில் வந்த போது எதிரே வந்த லாரியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

Van Accident

இதில், சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்த நிலையில், வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி அதிகாலையில் உயிரிழந்தார். விபத்தில் படுகாயமடைந்த 20 பேர் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல் கட்ட விசாரணையில் வேனில் வந்தவர்கள் கடலூர் மாவட்டம் புவனகிரி தாலுகா பரங்கிப்பேட்டை அடுத்த புதுசத்திரம் வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்த விசிக தொண்டர்கள் என்பது தெரியவந்தது.

இதையடுத்து உயிரிழந்த உத்தர குமார், யுவராஜ் மற்றும் அன்புச்செல்வன் ஆகியோரின் உடலை கைப்பற்றிய வேப்பூர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.