சாலையின் குறுக்கே செல்லும் கேபிள் வயரில் சிக்கிய புறாவை சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் அனைவரும் சேர்ந்து காப்பாற்றிய நெகிழ்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
இந்த உலகம் எல்லா உயிர்களுக்குமானது என்பார்கள். எத்தனையோ உயிரினங்கள் இந்த உலகத்தில் வாழ்ந்து வருகின்றன. உயிரினங்கள் மீது மனிதர்கள் இன்றளவும் அன்பை பொழிந்து வருகின்றனர். இப்படி இருக்க ஒரு புறாவுக்காக பரபரப்பான சாலையே ஸ்தம்பித்து நின்று உதவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.
பரபரப்பான சென்னை கேகே நகர் சாலையின் குறுக்கே செல்லும் கேபிள் வயரில் புறா ஒன்று சிக்கியுள்ளது. இதனைக் கண்ட கடைக்காரர்கள், சாலையில் பயணம் செய்தவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் பலரும் புறாவை காப்பாற்ற முயற்சி செய்துள்ளனர். ஆனால் நடுரோட்டின் குறுக்கே சென்ற மின்கம்பியில் புறா சிக்கியதால் அதனை மீட்பதில் சிக்கல் ஏற்பட்டது.
உடனடியாக சாலையில் வந்த பேருந்தை மறித்து உதவி கேட்டுள்ளனர். பேருந்து ஓட்டுநர்களும், பேருந்தில் உள்ள பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்கவே, பேருந்தில் ஏறி பிளாஸ்டிக் குழாய் மூலம் புறாவை மீட்டனர்.
பிறகு அது பறந்து சென்றது. கொளுத்தும் வெயிலில் பரபரப்பான சாலையில் பேருந்தை நிறுத்தி அங்கிருந்தவர்கள் அனைவரும் ஒரு புறாவுக்காக உதவி செய்த இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.