முதல்வர் விஜய் தலைமையில் இன்றும் நாளையும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கு மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில், டிஜிபி, அரசுத் துறை செயலர்கள், மாவட்ட ஆட்சியர்கள், எஸ்.பி.க்கள், டிஐஜி ஐஜிக்கள் ஆகியோர் பங்கேற்கவுள்ளனர். 3 அமர்வுகளாக நடைபெறும் மாநாட்டின் முதல் அமர்வில் ஆட்சியர்கள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். இதில், சட்டம் ஒழுங்கு, போதைப்பொருள் இல்லாத தமிழகம், திட்டங்களின் நிலை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும். மேலும், அரசின் திட்டங்கள் மக்களுக்கு முறையாக சென்றடைகிறதா? உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் ஆலோசிக்கப்படவுள்ளது. இரண்டு நாட்களாக நடக்கும் மாநாட்டில் இந்த 3 அமர்வுகளின் முடிவில் முதல்வர் விஜய் உரையாற்றுகிறார்.
இந்தசூழலில் தான், பரபரப்பான சூழலில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ”பரபரப்பான சூழ்நிலையில் தமிழகத்தில் ஐஏஎஸ் ஐபிஎஸ் மாநாடு இன்று முதல்வர் தலைமையில் நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு நாட்டின் உண்மை நிலையை வளர்ச்சியை அறிவியல் பூர்வமாக அறிந்திட வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சியை திட்டமிட வேண்டுமானால் முதலில் அந்நாட்டின் உண்மை நிலையை அந்த நாட்டினுடைய ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வேண்டும். உண்மை நிலையை அறிவியல் முறையில் அளவிட்டு புரிந்து கொள்வதகான நிலையை ஆட்சியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
குழந்தைகள் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அரங்கேராத நாளே தமிழ்நாட்டில் இல்லை என்கிற நிலை தொடர்ந்து கொண்டே உள்ளது. இதற்கு தீர்வு காணப்படுமா? தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. நேற்று கூட ராமநாதபுரத்தில் சிறுமி ஒருவர் மாயமாகி கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இது போன்ற சம்பவங்களை முதலமைச்சர் அறிந்திருக்கிற வாய்ப்பு உண்டு. காலையில் அனுப்பப்படும் கோப்புகளுக்கு மாலைக்குள் முதல்வர் கையெழுத்திட்டு அனுப்புகிறார் என்கிற செய்தி வருகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்திற்கு நிரந்தர தீர்வு ஏற்படுமா? என்கிற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அதேபோல,உதயகுமாருக்கு வேறு வேலை இல்லை எதையாவது சொல்லிக் கொண்டே இருப்பார் என்று சிலர் நையாண்டி செய்கிறார்கள். அக்கறையோடு தவெக அரசு மீது விமர்சனங்கள் வைக்கிறோம். எங்கள் விமர்சனங்கள் தமிழக வெற்றிக்கழக அரசுக்கு வலிமை சேர்ப்பதற்கும், பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்குமே தவிர, இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோ உள்நோக்கமோ எள் முனை அளவு இல்லை.
விமர்சனங்களின் நோக்கத்தை நம்புங்கள். விமர்சனத்தின் நோக்கத்தை நம்புங்கள் ஆக்சன் எடுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.