sterlite inspection
sterlite inspection pt desk
தமிழ்நாடு

தூத்துக்குடி : ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகளை அகற்றுவது குறித்து சார் ஆட்சியர் தலைமையில் ஆய்வு

webteam

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை மாநில அரசே அகற்றிக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதின் பேரில் இன்று தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் உள்ளூர் மேலாண்மை குழு நிர்வாகிகள் 9 பேர் ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையில் ஏற்கெனவே கடந்த 2018 முதல் 2022 ஆம் ஆண்டு வரையிலான 14 வகையான அபாயகரமான கழிவுகள் அகற்றப்பட்டுள்ளன. அதன்படி சல்பூரிக் ஆசிட், பாஸ்போரிக் ஆசிட், பெட்ரோலிய வாயு, ஹைஸ்பீட் டீசல், பர்னஸ் ஆயில், திரவ ஆக்சிஜன் மற்றும் திரவ நைட்ரஜன் உட்பட 14 வகையான வேதியியல் கழிவுகள் வெளியேற்றப்பட்டுள்ளது.

sterlite

தற்போது ஸ்டெர்லைட் ஆலையில் ஜிப்சம் கழிவுகள் மட்டும்தான் மிச்சம் இருக்கிறது. எனவே ஆலையில் மிச்சம் இருக்கும் ஜிப்சத்தின் அளவு என்ன, இந்த வேதியியல் கழிவுகளை எத்தனை வாகனங்களில் அப்புறப்படுத்தி பாதுகாப்பாக வெளியேற்றுவது, அதற்கான நிறுவனத்தை தேர்ந்தெடுப்பது எப்படி என்பது குறித்து இன்று ஆலைக்குள் செல்லும் மேலாண்மை குழு உறுப்பினர்கள் முடிவு செய்வர் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆய்வில் உள்ளூர் மேலாண்மை குழு, தூத்துக்குடி மாவட்ட சார் ஆட்சியர் கௌரவ் குமார் தலைமையில் மாவட்ட தொழிற்சாலை இணை இயக்குனர் சரவணன், மாவட்ட துணை தீயணைப்புத் துறை அதிகாரி ராஜு, மாநகராட்சி அதிகாரி ரங்கநாதன், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஹேமந்த், மாவட்ட ரூரல் டிஎஸ்பி சுரேஷ் மற்றும் ஸ்டெர்லைட் ஆலை பொறியாளர்கள் சரவணன் மற்றும் விஸ்வநாத் உள்ளிட்டோர் ஆலைக்குள் சென்று ஆய்வில் ஈடுபட்டனர்.

ஆலைக்குள் மிச்சம் இருக்கும் ஜிப்சம் கழிவுகளையும் அகற்றுவது குறித்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளதால் முக்கிய ஆய்வாக இன்றைய ஆய்வு மாறி உள்ளது.

sterlite

ஸ்டெர்லைட் ஆலைக்குள் ஜிப்சம் தவிர்த்து ஆலையின் உற்பத்தி பொருளுக்கான மூலப்பொருளும், அதற்கான இயந்திரங்களும் மட்டுமே மிச்சம் இருக்கும். இந்த மூலப் பொருளையும், ஆலை இயந்திரங்களையும் வெளியேற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.