வாசுகி , ஆ.ராசா web
தமிழ்நாடு

"ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள்.." ஆ.ராசா கருத்திற்கு சிபிஎம் விமர்சனம்!

தவெக அமைச்சரவையில் பங்கேற்ற விசிகவை கடுமையாக விமர்சித்த ஆ.ராசாவின் கருத்தை சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி விமர்சித்துள்ளார்.

Rishan Vengai

தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக விசிகவின் வன்னி அரசு பதவியேற்றது தமிழக அரசியலில் புதிய கட்டத்தை உருவாக்கியது. இதைத் தொடர்ந்து திமுக எம்பி ஆ.ராசா, விசிக மீது ஆணாதிக்க நிழலுடன் கூடிய உவமைகள், அவமதிப்பான சொற்கள் பயன்படுத்தியதால் சர்ச்சை வெடித்தது. அவரது பதிவை நீக்கிய பின்னரும், சிபிஎம் வாசுகி இந்த மொழிநடையை கடுமையாக விமர்சித்து, அரசியல் உறவுகளை திருமணத்துடன் ஒப்பிடும் பார்வையை கேள்விக்குட்படுத்தியுள்ளார்.

2026 சட்டமன்ற தேர்தலில் திமுக உடன் கூட்டணி வைத்து களம்கண்ட காங்கிரஸ், விசிக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள், தேர்தலுக்கு பின் தனிம்பெருங்கட்சியான தவெக ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்ததோடு தற்போது தவெகவின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன.

திருமாவளவன், முக ஸ்டாலின்

இந்நிலையில் இன்று விசிகவின் வன்னி அரசு தவெக அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். விசிக, திமுக கூட்டணியிலிருந்து பிரிந்து செல்லாது, தவெக அமைச்சரவையில் இடம்பெறாது என்று சொல்லப்பட்ட நிலையில், தமிழக அரசியலில் முதல்முறையாக அதிகாரத்தில் சென்று அமர்ந்துள்ளது விடுதலை சிறுத்தைகள் கட்சி.

இந்தசூழலில் விசிக அமைச்சரவையில் பங்கேற்றபிறகு திமுக எம்பி ஆ.ராசா கடுமையாக வார்த்தைகளால் விமர்சித்தது சர்ச்சையை கிளப்பியது.

எம்.பியும், திமுக துணைப்பொதுச்செயலாளராருமான ஆ.ராசா தனது எக்ஸ் சமூகவலைத்தளத்தில், முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’, மூட சாதியை நொறுக்க வேண்டிய சிறுத்தையும் வெறும் விசில் சத்தத்திற்கு ஆதரவாகிவிட்டதாக கூறியதோடு தவறான வார்த்தை பிரயோகத்தை பயன்படுத்தியும் விமர்சித்திருந்தார். அவரின் இந்த கருத்துக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், அந்த பதிவை அவர் நீக்கியுள்ளார்.

தொடர்ந்து " என் வீட்டுத் தோட்டத்துத்

தென்னை

கூனி வளைந்து

எதிர் வீட்டிற்கு இளநீர் தந்தால் இலக்கியத்தில்

அதற்குப் பெயர்

”முடத்தெங்கு”!

அரசியலில் என்ன பெயர் சூட்டலாம்?" என்று விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் தான் ஆ.ராசாவின் கருத்தை விமர்சித்திருக்கும் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் வாசுகி, “தேர்தல் கூட்டணி, பிரச்னைகளில் கூட்டியக்கம் போன்ற தற்காலிக அரசியல் உறவுகள் எப்போது திருமண அந்தஸ்து பெற்றன? அதிலும் கூட விவாகரத்து உண்டு... பூ முடித்தவரை புறம் தள்ளி என்பதெல்லாம் ஆணாதிக்கக் கண்ணோட்டத்தில் அழுந்தி கிடக்கும் வார்த்தைகள். என்ன ஆயிற்று?” என கேள்வி எழுப்பியுள்ளார்.