தவெக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள நிலையில், முதலமைச்சர் விஜயின் 110 விதியில் கீழ் சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய ஒருங்கிணைந்த புதிய வளாகம் சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், 1,200 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் தான், தலைமைச் செயலக வளாகம், சென்னை பட்டினப்பாக்கம் அருகிலுள்ள ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியில் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு சார்பில் அதிகாரப்பூர்வ அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
எனினும், தமிழக அரசின் இந்த முடிவுக்கு திமுக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தச்சூழலில் தான், தவெக ஆட்சியமைக்க ஆதரவளித்த கட்சிகளில் ஒன்றான சிபிஎம் பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்ட கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சிபிஎம் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அளித்துள்ள பேட்டியில், “தலைமைச் செயலகம் கட்டுமானம் நீண்டநாட்களுக்கானது. அதனை அவசரகதியில் செய்யக்கூடாது. பட்டினப்பகுதியில் தலைமைச் செயலகம் கட்டுவதற்கு அங்குள்ள மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவர்களின் உணர்வுகளுக்கு கோரிக்கைகளுக்கு தமிழக அரசு செவி சாய்க்க வேண்டும். மீனவர்களின் வாழ்வாதாரப் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு எவ்வித புதிய கட்டுமானப்பணிகளையும் தொடங்கக் கூடாது. புதிய தலைமைச் செயலகம் கட்ட பொருத்தமான இடத்தை தேர்வு செய்ய அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.