தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், திமுக 20-க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் மெகா கூட்டணியை அமைத்திருக்கிறது. அக்கூட்டணியில், தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்ட நிலையில், சிபி(எம்), விசிக, மநீம உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. பெரிய கூட்டணியை அமைத்திருப்பதால் அதிக தொகுதிகளை ஒதுக்க முடியாது என தொகுதிப்பங்கீட்டு பேச்சு வார்த்தையின் ஆரம்பக் கட்டத்திலேயே தெரிவித்து விட்ட திமுக அதன்படியே, ஐயூஎம்எல், மதிமுக, சிபிஐ உள்ளிட்ட கட்சிகளுக்கு கடந்த தேர்தலைவிட குறைவான தொகுதிகளையே ஒதுக்கியது. எனினும் காங்கிரசின் வலிமையான பேரத்தால் 3 தொகுதிகள் அதிகமாக பெற்றுவிட்டது.
இந்த சூழலில் தான், காங்கிரசுக்கு அதிகமான தொகுதிகள் கொடுத்து விட்டு தங்களுக்கு தொகுதிகளை குறைப்பது நியாமல்ல எனக் கூறி வரும் இந்திய கம்யூனிஸ் கட்சி (மார்க்சிஸ்ட்) 3 கட்ட பேச்சு வார்த்தையை திமுகவுடன் முடித்திருக்கிறது எனினும் இதற்கான முடிவு எட்டப்படவில்லை. கடந்த தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட சிபிஎம் இத்தேர்தலில் அதிகமாக தொகுதிகளைக் கேட்கிறது. ஆனாலும், திமுக 5 தொகுதிகள் மட்டுமே தர முன்வந்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், 3-ம் கட்ட பேச்சு வார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்திருந்த சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், கட்சியுடன் கலந்தாலோசித்துவிட்டு முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில், திமுகவுடனான கூட்டணி தொகுதிப்பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தி வரும் நிலையில், இக்கூட்டம் 6 மேலாக நடந்து வருகிறது. தேர்தல் கூட்டணி குறித்து விவாதிக்க சிபிஎம்-ன் மாநில குழு கூட்டம் இவ்வளவு நேரம் செல்வது இதுவே, முதன்முறை எனக் கூறப்படுகிறது.
இக்கூட்டத்தில், திமுக 6 தொகுதிகளுக்கு குறைவான தொகுதிகள் கொடுக்கும்பட்சத்தில் திமுக கூட்டணியில் இருந்து விலகி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடலாம் என அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. மேலும், சென்னையில் ஒரு தொகுதி கேட்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் தான், 6 மணி நேரத்தைக் கடந்து தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.