தமிழ்நாடு

மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழப்பு – காப்பாற்றச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்

kaleelrahman

திருவள்ளூர் அருகே மின்சாரம் தாக்கி பசுமாடு உயிரிழந்த நிலையில், அதை பார்க்க வந்த பெண் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மெய்யூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா (56). இடி மின்னலுடன் மழை பெய்த நிலையில் வீட்டின் வெளியே சத்தம் கேட்டதால் வெளியில் வந்து பார்த்தபோது அவரது பசு மாடு உயரிழந்தது தெரியவந்தது.

அதனைக் கண்டு வசந்தா ஒடிச்சென்ற போது பசு கீழே அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்துள்ளார். இதில், வசந்தா மீது மின்சாரம் தாக்கி நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த பெரியபாளையம் காவல் துறையினர் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

காற்றுடன் மழை பெய்ததால் மின்சார கம்பி அறுந்து விழுந்ததாகவும், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பசு மாட்டை காப்பாற்றச் சென்று பெண் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிகழ்வு மெய்யூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.