தமிழ்நாடு

கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனையை தொடங்கவுள்ள SRM!

Sinekadhara

SRM பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூரியில் கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று, அக்கல்லூரியின் முதல்வர் சுந்தரம் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ICMRமும், பாரத் பயோ டெக் நிறுவனமும் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இவர்கள் தயாரித்துள்ள ‘கோ- வான்ஸின்’ என்ற தடுப்பு மருந்தை SRM பல்கலைக்கழகத்தில் வைத்து மனிதர்களுக்கு சோதனை செய்துவருகின்றனர். தாமாக முன்வந்த தன்னார்வலர்களை வைத்து, முதல் இரண்டு கட்ட சோதனைகளை நடத்தி முடித்திருக்கின்றனர்.

இதனுடைய 3ஆம் கட்ட பரிசோதனையை அடுத்த வாரத்தில் நடத்த SRM நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதுமட்டுமில்லாமல், தமிழகத்தில் சென்னை மருத்துவ கல்லூரி மற்றும் ராமச்சந்திரா மருத்துவ கல்லூரியில், இங்கிலாந்து ஆக்ஸ்ஃபோர்டு நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனை நடந்துவருகிறது. இதுவும் கிட்டத்தட்ட 2ஆம் கட்டத்தின் நிறைவை எட்டியுள்ளது. இதுமட்டுமல்லாமல் SRM பல்கலைக்கழகமும் ஒரு தடுப்பு மருந்தை தயாரித்துள்ளனர். இதன் பரிசோதனை விலங்குகளிடையே முடிந்து மனிதர்களிடம் முதல்கட்ட சோதனை நடைபெறவுள்ளது.

இதனிடையே சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் அமைந்துள்ள SRM பல்கலைக்கழகத்தின் மருத்துவ கல்லூயில் கொரோனா தடுப்பூசியின் 3ஆம் கட்ட பரிசோதனை அடுத்த வாரத்தில் தொடங்கும் என்று, அந்த கல்லூரியின் முதல்வர் சுந்தரம் தெரிவித்துள்ளார். 2ஆம் கட்ட பரிசோதனைகள் வெற்றியடைந்ததால் 3ஆம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 3ஆம் கட்டத்தில் கிட்டத்தட்ட 1000 பேர் பங்குபெறுவார்கள் என நம்பப்படுகிறது.

இந்த 3ஆம் கட்ட பரிசோதனையில் முதலில் ஒரு டோஸ் மருந்து செலுத்தப்படும். பிறகு 25 நாட்கள் கழித்து 2வது டோஸ் கொடுக்கப்படும். இதனால் குறைந்தது 8 முறை அவர்கள் பரிசோதனைக்கு வரவேண்டி இருக்கும். பக்கவிளைவுகள் எதுவும் இல்லாத பட்சத்தில், நோயெதிர்ப்பு சக்தி எவ்வளவு அதிகரிக்கிறது என்பதைப் பொருத்து மருந்தின் வீரியத்தன்மை உறுதி செய்யப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று அவர் கூறியுள்ளார்.