கணவர் கொலை செய்யப்பட்டதால் வாழ்வாதாரமின்றி தவிக்கிறார் கோவையைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர்.
கோவையை சேர்ந்த மூதாட்டி பாக்கியத்திற்கு சோகங்களே தொடர்கதையாகி வருகின்றன. கோவையின் பூச்சந்தை அருகே வசித்து வந்த இவரின் கணவர் பொன்ராஜ், அண்மையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கொல்லப்பட்டு கிடந்தார். 27 ஆண்டுகளாக பணியாற்றி வந்த வணிகவளாகத்திலேயே அவர் இறந்தது தொடர்பாக, கண்ணதாசன் என்பவர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வாழ்வுக்கு ஆதாரமாக இருந்த பொன்ராஜ் இறந்ததால் இவரது குடும்பம் வாழ்வாதாரத்தை இழந்துள்ளது.
அவரின் மனைவியான மூதாட்டி பாக்கியம், கடைசி காலத்தில் தம்மை கவனித்துக் கொள்ள பிள்ளைகளோ, உறவினர்களோ இல்லாத சூழலில், தம் கணவர் 27 ஆண்டுகளாக பணியாற்றி வந்த வணிக வளாகத்தின் உரிமையாளர் கூட உதவ முன்வரவில்லை என வருத்தத்துடன் கூறுகிறார். வயது முதிர்ந்த நிலையில், ஆதரவின்றி தவிக்கும் இந்த மூதாட்டி, உதவும் கரங்களை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு அரசு உரிய உதவிகளை செய்ய வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.