மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்களின் துப்பாக்கி சூடு பயிற்சியினால், வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடுதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பாலமலை வனப்பகுதியில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் முகாம் அமைத்து பயிற்சியில் ஈடுபட பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவ்வப்போது பாலமலை வனப்பகுதியில் முகாமிடும் வீரர்கள், விடிய விடிய ஆயுதப்பயிற்சியில் ஈடுபடுவதாகவும் பழங்குடியினர் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பயிற்சிகளின் போது எழும் ஒலியால் அச்சமடையும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்துவிடுவதாகவும் கூறப்படுகிறது.
இதனால் கால்நடைகளை பாதுகாப்பாக வளர்க்க முடியவில்லை என்று பாலமலை பழங்குடியின மக்கள் ஆதங்கப்படுகின்றனர். வனச்சூழலுக்கும், தங்கள் வாழ்வாதாரத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் மத்திய தொழில்பாதுகாப்பு படை வீரர்களுக்கு பாலமலை பகுதியில் இனி பயிற்சிக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் பழங்குடியினர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.