கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதிக்கு அச்சிறுமியின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 25ஆம் தேதி பன்னிமடை பகுதியில் 7 வயது சிறுமி காணாமல் போனார். 2 நாட்களுக்குப் பின் வீட்டிற்கு அருகேயே அவரது உடல் மீட்கப்பட்டது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அந்தச்சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தெரியவந்தது. விசாரணையின் விளைவாக, சிறுமியின் வீட்டருகே வசித்து வந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். முதலில் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை பிறகு போக்சோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. கடந்த 19ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சந்தோஷ்குமார் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவர் குற்றவாளி என போக்சோ சிறப்பு நீதிமன்றம் இன்று அறிவித்தது.
அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு ஆயுள்தண்டனையும் 302 பிரிவின் படி மரண தண்டனையும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இதனிடையே கடந்த ஒன்றாம் தேதி கோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தடயவியல் சோதனை அறிக்கையில், சிறுமியை சந்தோஷ்குமார் மட்டுமின்றி வேறொரு நபரும் வன்கொடுமை செய்திருப்பது தெரியவந்தது. அதனை சுட்டிக்காட்டி, இந்த வழக்கை மறு விசாரணை செய்ய கோரிக்கை விடுத்து சிறுமியின் தாய் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்து நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதிக்கு அச்சிறுமியின் தாயார் நன்றி தெரிவித்துள்ளார். மேலும் “சிறுமி கொலை வழக்கில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியையும் கண்டுபிடித்து அவருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும். என் குழந்தைக்கு நடந்தது போல் எந்தக் குழந்தைக்கும் நடக்கக்கூடாது” எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் உறவினர்கள் கூறுகையில், தூக்குத் தண்டனை பெற்றுள்ள குற்றவாளி சந்தோஷ்குமார் தவறை உணர வேண்டும் எனவும் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு தூக்குத் தண்டனை வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும் தெரிவிக்கின்றனர். கோவை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அருகே மற்றொரு குற்றவாளியையும் கண்டுபிடித்து தண்டனை வழங்க வலியுறுத்தி மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.