தமிழக அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அமைச்சரவையில் தற்போது விளையாட்டுத் துறை அமைச்சராக இருப்பவர் பாலகிருஷ்ணா ரெட்டி. இவர் கடந்த 1998-ஆம் ஆண்டு ஓசூர் அருகே பாகலூரில் நடைபெற்ற போராட்டத்தில் பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் மொத்தம் 108 பேர் குற்றம்சாட்டப்பட்டிருந்தனர்.
இவ்வழக்கில் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது. அத்துடன் 10,000 அவருக்கு ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்கை விசாரிக்கும் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது. குற்றம்சாட்டப்பட்ட 108 பேரில் 16 பேர் குற்றவாளிகள் எனவும் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக பாலகிருஷ்ணா ரெட்டி சார்பில் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனையடுத்து பாலகிருஷ்ணா ரெட்டிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதிமன்றத்திற்கு வெளியே வந்து பேசிய பாலகிருஷ்ணா ரெட்டி, தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை மேல்முறையீடு செய்ய இருப்பதாக கூறினார். அத்துடன் 20 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற போராட்டத்தில் பதியப்பட்ட வழக்கு என்றும் தெரிவித்தார்.