செய்தியாளர்: இ.சகாய பிரதீபா
மதுரை கைத்தறி நகரில் மதுபான கடை திறக்க தடை கோரி மேகலா என்பவர் வழக்கை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு, 'அரசு ஒரு பக்கம் டாஸ்மாக் கடைகளை திறந்துவிட்டு, மறுபக்கம் போதை மறுவாழ்வு மையங்களை அதிகரித்து வருகிறது. நம் வீட்டு குழந்தைகளுக்கு இதுபோல செய்வோமா? அரசின் கொள்கைகளே முரணாக உள்ளன. ஆன்லைன் ரம்மி விளையாட்டை முறைப்படுத்த நடவடிக்கை எடுத்த தமிழக அரசு, டாஸ்மாக் கடை விவகாரத்தில் வேறு மாதிரியான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
அக்கால திரைப்படங்களில் வன்முறை, மது போன்ற போதைப் பொருட்களின் பயன்பாடு உள்ளிட்ட காட்சிகள் இடம்பெறாது. ஆனால், இன்றைய திரைப்படங்களில் இந்த காட்சிகள் இடம் பெறாமல் இருப்பதில்லை. அரசு டாஸ்மாக் கடையை நடத்த வேண்டியதன் அவசியம் என்ன? அது அரசின் பணி இல்லையே? அரசு எடுத்து நடத்துவதற்கு ஏராளமான தொழில் சார்ந்த நிறுவனங்கள் இருக்கையில் அரசு டாஸ்மாக் கடையை ஏன் நடத்த வேண்டும்? டாஸ்மாக், ஆன்லைன் ரம்மி இரண்டுமே கொலை செய்பவை. டாஸ்மாக் விவகாரத்தில் அரசன் நிலைப்பாடு என்ன? மதுவே ஊழல், சட்டவிரோதம், குற்றச்சம்பவங்கள் போன்ற பலவற்றுக்கும் காரணமாக அமைகின்றது என கருத்து தெரிவித்தனர்.
அரசு தரப்பில், 'மது அருந்துவதை அரசு ஊக்குவிப்பதில்லை' என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், 'மது அருந்துவதை அரசு ஊக்குவிக்கவில்லை எனில் எதற்காக மதுவை விற்பனை செய்கிறீர்கள்? ஒவ்வொரு கட்சிக்காரர்களும் மதுக்கடைகள் மூடப்படும் என குறிப்பிடும் நிலையில் யாரும் அதை செய்வதில்லை' என தெரிவித்தனர். அரசுத் தரப்பில், 'மதுக்கடைகளின் எண்ணிக்கை இனிமேல் அதிகரிக்கப்படாது. கடைகள் படிப்படியாக மூடப்படும்' என தெரிவிக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், 'அவ்வாறெனில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள் மூடியவாறே இருக்கலாமே? ஏன் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடமாற்றம் செய்கிறீர்கள்? என கேள்வி எழுப்பினர். மேலும் யார் எப்படி இருந்தாலும், அரசு வேலை வாய்ப்பு, கல்வி, பொது நலன் போன்றவற்றிலேயே கவனம் செலுத்தி, நல்லதை மட்டுமே செய்ய வேண்டும்' என குறிப்பிட்டு, அரசு தரப்பில் எழுத்துப்பூர்வமாக பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.