தமிழ்நாடு

நிர்மலாதேவியின் ஜாமீன் ரத்து..! பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவு

webteam

நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்து, பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல கூட்டு சதி செய்தது உட்பட சில பிரிவுகளின் கீழ் பேராசிரியர் நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து உதவி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கு தொடர்பாக முருகன் மற்றும் கருப்பசாமி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. இது குறித்து தெரிவித்த நிர்மலா தேவியின் வழக்கறிஞர், பேராசிரியர் நிர்மலாதேவி மன நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் அதனால் வழக்கு விசாரணைக்கு இன்று  ஆஜராகவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், நிர்மலாதேவிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ததோடு, பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.