தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை மறு உடற்கூராய்வு செய்வது தொடர்பாக நீதிமன்றம் புதிய உத்தரவு

webteam

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பள்ளி மாணவி உடலை `பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு செய்யலாம்’ எனக்கூறி அதற்கு அனுமதியளித்த சென்னை உயர் நீதிமன்றம், `பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும்’ என்றும் தமிழக அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சின்னசேலம் பள்ளி மாணவி உடலை மறு உடற்கூராய்வு செய்ய உயர் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டதன் அடிப்படையில் அதற்கான ஏற்பாடுகளை அரசு இன்று செய்தது. இதற்கிடையில் தங்கள் தரப்பு மருத்துவரை உடற்கூராய்வு குழுவில் சேர்க்கக் கோரியும், அதுவரை உடற்கூராய்வுற்கு தடை விதிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் இன்று காலை முறையிடப்பட்டது.

ஆனால், வழக்கை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகவும், உடற்கூராய்விற்கு தடை விதிக்க முடியாது என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது. இந்நிலையில் உயர்நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு தமிழக அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா ஆஜராகி, `பெற்றோர் எங்கு இருகிறார்கள் என தெரியவில்லை. உடற்கூராய்வு நிபுணர்கள் வந்துவிட்டார்கள். வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய பிறகு பெற்றோர் தரப்பு இல்லாமல் உடற்கூராய்வு செய்யலாமா என தெளிவுபடுத்த வேண்டும்’ என்று முறையீடு செய்தார். உச்சநீதிமன்றம் தடை உத்தர எதுவும் விதிக்காதது குறித்தும் அவர் தெரிவித்தார்.

இதையடுத்து பெற்றோர் இல்லாமல் மறு உடற்கூராய்வு செய்யலாம் என அனுமதியளித்த நீதிபதி, பெற்றோர் வந்தால் அனுமதிக்க வேண்டும் என்றும் அரசுக்கு அறிவுறித்தியது.