தமிழ்நாடு

மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 24-ல் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Rasus

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து அவதூறாகப் பேசியதாக தொடரப்பட்டுள்ள வழக்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 24-ஆம் தேதி ஆஜராக திருச்சி முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜூன் 21-ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் ஸ்டாலின் பங்கேற்றார். அதில் பேசிய அவர் முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியதாக வழக்கறிஞர் சம்பத் என்பவர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்காக ஸ்டாலின் இன்று ஆஜராக வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நினைவேந்தல் கூட்டம் இன்று நடைபெற உள்ளதால் வேறு தேதியில் நேரில் ஆஜராக ஸ்டாலின் தரப்பில் அனுமதி கேட்கப்பட்டது. அதனை ஏற்று செப்டம்பர் 24-ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆஜராக திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.