விருத்தாசலத்தில் இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு அரசுப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த குமாரமங்கலத்தைச் சேர்ந்த கௌரி மற்றும் தமிழரசி ஆகியோர் 2016 ஆம் ஆண்டு சேத்தியாதோப்பில் இருந்து விருத்தாசலத்திற்கு சென்றபோது, இவர்கள் சென்ற பேருந்து, மற்றொரு அரசுப் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கௌரி மற்றும் தமிழரசி இருவரும் படுகாயமடைந்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விருத்தாசலம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதில் கௌரி மற்றும் தமிழரசிக்கு போக்குவரத்து கழகம் சார்பில் தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனால் போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்காததால் மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் கௌரி மற்றும் தமிழரசி ஆகியோருக்கு தலா 31 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் இல்லையெனில் போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான இரு பேருந்துகளை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. தற்போது இழப்பீடு வழங்காததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் இரண்டு அரசுப் பேருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.