Chennai High Court
Chennai High Court pt desk
தமிழ்நாடு

பாலியல் புகாரில் கைதான உதவி பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனு - நீதிமன்றம் புதிய உத்தரவு!

Kaleel Rahman

திருவான்மியூர் கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி அருண்டேல் கல்லூரியில் படித்தபோது, உதவி பேராசிரியரால் தான் பாலியல் தொல்லைக்கு உள்ளானதாக அடையாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அக்கல்லூரியின் முன்னாள் மாணவி ஒருவர் புகார் அளித்தார்.

அதன்கீழ் நடனத்துறை உதவி பேராசிரியர் ஹரி பத்மன் மீது பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ஏப்ரல் 3 ஆம் தேதி அவரை கைது செய்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஹரி பத்மன் தாக்கல் செய்த மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், கண்டிப்பான ஆசிரியரான தன் மீது, பழைய மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளதாகவும், தனது வளர்ச்சியை பிடிக்காத சிலர், மாணவிகளைத் தூண்டி விட்டு பொய் புகார் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனு முதன்மை நீதிபதி எஸ்.அல்லி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இவ்விவகாரத்தில் காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் செவ்வாய்க்கிழமைக்கு (ஏப்ரல் 25) ஒத்திவைத்தார் நீதிபதி.