அந்நிய செலாவணி மோசடி வழக்கில் குற்றச்சாட்டப்பட்ட சசிகலாவை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தனியார் தொலைக்காட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன் ஆகியோர் மீது 1996 ஆம் ஆண்டு அன்னிய செலாவணி மோசடி வழக்குகளை மத்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் பதிவு செய்தனர். இந்த வழக்கு எழும்பூரில் உள்ள பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி மலர்மதி முன்பு விசாரணைக்கு வந்த நிலையில், அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சசிகலா மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் கையெழுத்து இடவில்லை என்றும் இந்த வழக்கு விசாரணை இன்னும் முடியாமல் உள்ளது என்றும் வாதிட்டார்.
இந்நிலையில் சசிகலா மீது மறு குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவிட்ட நீதிபதி, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவை டிசம்பர் 13 ஆம் தேதி நேரில் அழைத்து வர சிறை வாரண்ட் பிறப்பித்து ஆணையிட்டார். இந்நிலையில் சசிகலா தனக்கு பிறப்பித்த வாரண்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு அவசர வழக்காக இன்று விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற ஆனந்து வெங்கடேஷ் அமர்வு சசிகலாவை நேரில் ஆஜராக எழும்பூர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே வரும் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் கர்நாடக மாநிலம் பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலாவிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.