தரங்கம்பாடி அருகே பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கிய புதுமண தம்பதியினர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகாவில் உள்ள கிளியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் படித்த 30-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அகர விடியல் என்ற சேவை அமைப்பை தொடங்கி ஏழை மக்களுக்கு பல்வேறு நல உதவிகளை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அகர விடியல் சேவை அமைப்பைச் சேர்ந்த முன்னாள் மாணவரான மாதவனின் திருமணம் இன்று நடைபெற்றது. இதையடுத்து திருமணம் முடிந்த கையோடு மணமகள் தரணியை அழைத்துக் கொண்டு கிளியனூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்குச் சென்றார். அப்போது பள்ளி தலைமை ஆசிரியை சத்யா மற்றும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கரகோஷம் எழுப்பி உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து அங்கு படிக்கும் 258 மாணவர்களுக்கு சிலேட், பேனா ஆகிய எழுதுபொருள்களை தம்பதியர் வழங்கினர். திருமண நாளில் தங்கள் பள்ளிக்கு வந்து நல உதவிகளை வழங்கிய புதுமணத் தம்பதியினருக்கு மாணவர்கள் டாட்டா காட்டி உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
மாதவனின் நண்பர்களான பிரபு, ஆனந்த், பாலாஜி, வீரபாண்டியன், சத்யராஜ், சதீஷ், பிரசாத் ஆகியோர் தங்களது நண்பனின் திருமண நிகழ்வை நெகிழ்ச்சி மிக்க நிகழ்வாக மாற்றும் வகையில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர்.