திருமணத்திற்காக சேமித்து வைத்திருந்த 51 ஆயிரம் ரூபாயை தமிழக அரசின் கொரோனா நிவாரணத்திற்காக புதுமணத் தம்பதியர் மணக்கோலத்தில் சென்று அமைச்சர் பொன்முடியிடம் வழங்கினர்.
விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி பகுதியை சேர்ந்த ராஜி என்பவரது மகன் ஹரிபாஸ்கர். இவர் பத்தர் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கும் மணலூர்பேட்டை பகுதியை சேர்ந்த சஙகர் என்பவரது மகளுக்கும் இன்று திருமணம் நடத்துவதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழக அரசு கொரோனா இரண்டாம் அலை பரவி வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு 25 நபர் மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா கட்டுப்பாடுகளால் கோயிலில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு மிக எளிமையான முறையில் இன்று அவர்களது திருமணம் நடைபெற்றது. இதனால் தமது திருமணத்திற்காக சேமித்து வைத்த பணத்தில் 51 ஆயிரம் ரூபாயை தமிழக அரசின் கொரோனா நிவாரணத்திற்காக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம், மணக்கோலத்தில் சென்று தம்பதிகள் வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி மணமக்களை வாழ்த்தி, நன்றி தெரிவித்தார்.