கோவை அரசு பொது மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உடலை ஒப்படைக்க லஞ்சம் கேட்கும் காட்சிகள் பிரத்யேகமாக புதிய தலைமுறைக்கு கிடைத்திருக்கின்றன.
திருப்பூரைச் சேர்ந்த ஒருவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களின்டம் ஒப்படைக்க மருத்துவமனை ஊழியர் ரூ.2,000 லஞ்சம் கேட்டுள்ளார். பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு உடலைச் சுற்றும் காடா துணி, பஞ்சு போன்றவைகளை யாரும் கொடுப்பது இல்லை அதனை வாங்குவதற்கு தான் இந்த பணம். அங்கு வரும் அனைவருமே பணம் கொடுத்துதான் உடலை பெறுகின்றனர் என அந்த ஊழியர் கூறியுள்ளார். மேலும், லஞ்சம் கேட்பதை தடுக்க வேண்டிய இடத்தில் இருக்கும் காவல்துறை அதிகாரி ஒருவரே பணம் கொடுப்பது வழக்கமான நடைமுறை தான் என்று கூறி லஞ்சம் தர வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.