தமிழ்நாடு

சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா

webteam

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் நாளுக்கு நாள் உயிரிழப்பும் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தமிழகத்தில் இதுவரை 911 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே சென்னை தேனாம்பேட்டையில் டி.எம்.எஸ் எனப்படும் ஊரக மருத்துவ பணிகள் கழக அலுவலக வளாகம் உள்ளது. மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உள்ளிட்ட, பல மருத்துவத்துறை சார்ந்த அலுவலகங்கள் இந்த வளாகத்தில் இயங்கி வருகின்றன. 108 ஆம்புலன்ஸ், பொது சுகாதாரத்துறை, காசநோய் தடுப்பு மற்றும் தேசிய சுகாதார திட்டம் உட்பட பல்வேறு அலுவலகங்களும் இதே வளாகத்தில் அமைந்துள்ளன.

இந்த நிலையில் டிஎம்எஸ் வளாகத்தில் எழுத்தராக பணிபுரியும் 45 வயது ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் சமீபத்தில் டெல்லியிலிருந்து வந்துள்ளார். அவர் மூலம் கொரோனா பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.