தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் மகன், சகோதரி உள்ளிட்ட 8 பேருக்கு கொரோனா

webteam

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதனின் மகன், சகோதரி உள்ளிட்ட 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பொதுமுடக்கத்தின்போது வழக்குகள் அனைத்தும் காணொலி மூலம் விசாரிக்கப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து வழக்குகள் நேரடியாகவும் விசாரிக்கப்பட்டன. பெரும்பாலான நீதிபதிகள் நேரடியாக விசாரிக்க ஒப்புதல் அளித்தனர். நீதிபதி எஸ்.வைத்தியநாதனும் வழக்குகளை நேரடியாக விசாரித்து வந்தார். அவருக்காக ஒதுக்கப்பட்ட நீதிமன்ற பணியாளரின் கணவர் உள்ளிட்ட 4 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை தெரிவிக்காமல் அந்த பணியாளர் தொடர்ந்து பணிக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக நீதிபதி வைத்தியநாதனின் அலுவலகத்தில் உள்ள வாகன ஓட்டுநர், நீதிமன்ற ஊழியர், இரண்டு பொதுப்பணித் துறை ஊழியர்கள், ஒரு காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் நீதிபதியின் மகனுக்கும் சகோதரிக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.