தமிழ்நாடு

ஜெயலலிதா நினைவிட திறப்பின்போது விதிமீறல் என வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

ஜெயலலிதா நினைவிட திறப்பின்போது விதிமீறல் என வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

jagadeesh

மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவின்போது, கொரோனா தடுப்பு விதிகளை மீறியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கோரிய மனுவுக்கு ஆறு வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட போதும், முகக் கவசம் அணிவது, தனி மனித விலகலை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன. இந்நிலையில், கடந்த ஜனவரி 27ம் தேதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழாவில் கலந்து கொண்டவர்கள், இந்த கட்டுப்பாடுகளை மீறியதாகக்கூறி வழக்கறிஞர் தொண்டன் சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, நினைவிட திறப்பு விழாவுக்காக ஆயிரக்கணக்கான வாகனங்களை காவல்துறை அதிகாரிகள் எப்படி அனுமதித்தனர் எனக் கேள்வி எழுப்பிய மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், கொரோனா தடுப்பு விதிகளை முறையாக கடைபிடிக்காதவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார்.

இதையடுத்து, மனுவுக்கு ஆறு வாரங்களில் விளக்கமளிக்கும்படி, தமிழக அரசுக்கும், சென்னை மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.